Posts Tagged ‘ஜிடிஎன்’

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

கலந்து கொண்ட சிலரின் கருத்துகள்: வரலாறை உலகறிய செய்யவேண்டும்: முத்துப்பாண்டி, புத்தக விற்பனையாளர், மதுரை ஆராய்ச்சி மையம்: வரலாற்று ஆய்வு மாணவர்கள் கள்,பேராசிரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாக இம்மாநாடு திகழ்கிறது.எங்களிடம் ரூ.80 முதல் ரூ.2500 வரை புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. முதல் முறையாக திண்டுக்கல்லில் விற்பனை நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தகங்களுக்கு மவுசு: உதயகுமார் மதுரை கல்வெட்டுஆய்வாளர்: கி.மு.6ம் நுாற்றாண்டில் எழுத்து முறையில் உள்ள புத்தகங்கள் இங்கே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 தினங்கள் மாநாடு நடப்பதால் அதிக வரவேற்பு உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள பேராசிரியர்கள் அதிகமானோர் பங்கேற்பதால் புத்தகங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது: ராஜவர்மன், வரலாற்று பேராசிரியர், பழநி: தென் இந்தியாவில் முதன் முறையாக இம்மாநாடு நடக்கிறது. அதிக ஆர்வமாக மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டுள்ளனர் .வரலாற்றுக்கு ஜி.டி.என்.கல்லுாரி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மக்களுக்கு வரலாற்றை கற்றுகொடுக்க வேண்டும். 4 வகையில் பிரித்து கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அறிஞர்களும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிவியல் படித்தவர்களும் ஆர்வம்: முருகேஸ்வரி, பேராசிரியை, திண்டுக்கல்: கேரளாவிலிருந்து அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் கலாசாராத்தை அறிய அவர்களும் ஆர்வமாக உள்ளனர். இம்மாநாட்டின் மூலம் வரலாற்று அறிஞர்கள் தொடர்பு பெருகும். அறிவியல் படித்தவர்களும் வரலாற்றை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம்: செல்லப்பாண்டி, பேராசிரியர், அருப்புக்கோட்டை: வரலாற்றின் பாரம்பரியத்தை மாணவர்களின் மத்தியில் புகுத்தவேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகளை அதிகம் நடத்துவதன் மூலம் வரலாற்றிஞர்களின் உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.

புதிதாக கற்றுகொள்வோம்” ரகசனா, வரலாற்று மாணவி, கேரளா: கேரளாவிலிருந்து 20க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்துள்ளோம். வரலாறு போற்றப்படக்கூடிய விஷயம். கலாசாரத்தை அறிந்துகொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம். புதிதாக வரலாறு குறித்து கற்றுகொள்வோம்.

நல்லதொரு வாய்ப்பு: சிவாங்கி, பேராசிரியர், பஞ்சாப்: இதுபோன்ற வரலாற்று மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு இது முதல் அனுபவம்மிக ஆர்வமாக உள்ளது. தென்னிந்திய மன்னர்களை அறிவது மிக அபூர்வம். ஒவ்வொரு படைப்புகளும் என்னை வியப்படைய செய்கிறது.வரலாற்றை அறிய நல்ல வாய்ப்பாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கிறது: இஷா டம்டா, பேராசிரியர், பஞ்சாப்: இவ்வளவு அதிகமான வரலாற்று அறிஞர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மாநாடுகளை ஆண்டு முழுவதும் நடத்தினால் நன்மை பயக்கும்.

பிறகு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களிடம் உரையாடி, விசயங்களை அறிந்த போது, இவர்கள் எல்லோரும் (மேலே கருத்து சொன்னவர்கள்) முழு உண்மை அறியாமல் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிந்தது.

ஆய்வுக்கட்டுரைகளின் தராதரம் முதலியன: நிறைவாக புதியத் தலைவர், சுப்பராயலு பேசும் பொழுது, “நான் ஒவ்வொரு அறையாகச் சென்று, 20-30 நிமிடங்கள் உட்கார்ந்து, ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும், அறையில் இருந்து கேட்பவர்களுக்கும்;  நிர்வகிக்கும் தலைவருக்கும் ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்தது. அறையில் இருந்து கேட்பவர்கள், ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்காமல், கவனிக்காமல் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல, நிர்வகிக்கும் தலைவரைச் சுற்றி ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. யாரும் எந்த கேள்வியையும் கேட்கவில்லை, உரையாடல் இல்லை. படித்துமுடித்தவுடன், சான்றிதழை வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கட்டுரைகளின் தரமும் நன்றாக இல்லை…..இந்நிலை மாறவேண்டும். ஆராய்ச்சித் திறன் வளரவேண்டும்………..சரித்திரம் படிப்பவர்களுக்கு வேலைக் கிடைப்பதில்லை என்பதில்லை. இஞ்சினியரிங் படித்தவர்களுக்கும் சரியான, முறையான வேலைக் கிடைப்ப்தில்லை. குறைந்த சம்பளத்திற்கு, சம்பந்தம் இல்லாத வேலையை செய்து வருகிறார்கள். எனவே, தமது திறமையை உயர்த்திக் கொண்டால் தான் முன்னேறமுடியும்….,.” என்றெல்லாம் நிலைமையை எடுத்துக் காட்டினார். இதனை நிர்வாகிகள் மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாட்டு பிரச்சினைகள்: 40வது மாநாட்டிலேயே (சிதம்பரம்) உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: என்றெல்லாம் குறிப்பிட்டப் பட்டது[1]. 41வது மாநாட்டிலோ, அதைவிட படுமோசமாக உணவு இருந்தது. நிர்வாகிகள் ஒன்றையும் கற்றுக் கொண்டதாக, வருத்தப் பட்டதாக, மாறியதாகத் தெரியவில்லை. “History repeats” என்பது போல அதை விட மோசமாக நடந்துள்ளது. மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். என்று கல்லூரி நிர்வாகத்தினரே ஒப்புக் கொண்டனர். அதாவது, சுமார் ரூ 32 லட்சம் வசூலாகி உள்ளது. முதல் நாளில் 800, இரண்டாம் நாள் 1200 மற்றும் மூன்றாம் நாள் 1600 என்று பதிவுசெய்யப் பட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. அப்படியென்றால், உடனடியாக அறிந்து சரிசெய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இதிலிருந்தே, அவர்கள் வேண்டுமென்றே செய்தது போலிருக்கிறது.  ஒரு முறை தெரியவில்லை, எதிர்பார்க்கவில்லை, அதனால், அப்படி நடந்து விட்டது என்றால் சரி ஆனால், திரும்ப-திரும்ப மூன்று வேளையும் அப்படியே நடக்கின்றது-நடந்தது என்றால் என்னத்தைச்சொல்வது. முடியவில்லை என்றால் கூட்டத்தை சேர்க்கக் கூடாது. உணவு, மிக சாதாரணமாக இருந்தது, தினம் தயிர்சாதம் என்று மோர்சாதத்தை விட மோசமாக, வெறும் சாதம் கொடுக்கப் பட்டது.

உணவு இல்லை, கொடுத்ததும் தரமாக இல்லை: ஒரே ஒரு உணவு வகைதான் மூன்று வேளைகளுக்கும் கொடுக்கப் பட்டது. தயிரே காணப் படாத தயிர்சாதம், உப்புமா, இட்லி, ஊத்தப்பம், சாம்பார்-சாதம் என்று அவையே பரிமாறப் பட்டது. முதல் நாளிலிருந்தே, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இட்லி புளிப்பாக, ஒல்லியாக தட்டையாக இருந்தது, சட்னி இல்லை, சாம்பார் குறைவாகவே ஊற்றப் பட்டது. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர்.  உணவுப் பெறுவதற்குக் கூட நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களின் தலைகளுக்கு மேலாக தட்டுகளைக் நீட்டிக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காலியான பாத்திரங்கள் முன்பாக நின்று கொண்டு மற்றவர்கள் தவித்தனர். அருகில் எந்த ஒட்டலும் இல்லை, இதனால், பலர் தத்தம் தகுமிடங்களுக்குச் சென்று, அருகில் கிடைப்பதை வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டது. அவர்களால் முடியவில்லை என்றால், இவ்வாறு ஆயிரக் கணக்கில் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம், மர்மம், அதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. கோவில்களில் கூட கொடுக்கும் பிரசாதம் நன்றாக இருக்கும்.

பொறுப்புள்ளவர்கள் நிலைமையை மாற்ற வேண்டும்: ஓய்வு பெற்ற சரித்திர ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதலியோர் தனியாக ஒரு சங்கத்தை வைத்து நடத்திக் கொள்ளலாம். ஆனால், சரித்திரம் பயிலும் மாணவ-மாணவியரை இணைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கலாம், பதிப்பிக்கலாம் என்ற ஒரே தூண்டுதல், கவர்ச்சி மற்றும் தேவையை வைத்துக் கொண்டு, அவர்களை வரவழைத்து, உறுப்பினர்கள் ஆக்கி, சான்றிதழ் கொடுக்கிறேன், ஆய்வுக் கோவை புத்தகத்தில் வெளியிடுகிறோம் என்ற ஆசையைக் காட்டி கூட்டத்தைச் சேர்க்கின்றனர். ஆங்கிலம் தெரியாமல், பார்த்துப் படிக்கக் கூட முடியாமல்……………….தவிக்கும் மாணவ-மாணவியர் கட்டுரை வாசிப்பது விசித்திரமாக, திகைப்பாக, வருத்தமாக இருக்கிறது. சுப்பராயலு இதனை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டி விட்டார். இவ்வாறு படிப்பு, ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆராய்ச்சித் திறன், சரித்திர வரைவியல் முறை, என்று செல்லாமல், சந்தர்ப்பவாதம் மற்றும் இதர காரணங்களை வைத்துக் கொன்டு அடத்தப் படும், இத்தகைய கூட்டங்களுக்கு நாளடைவில் வரவேர்பு குறைந்து விடும். சரித்திரம், சரித்திர பாடம் மீதுள்ள மரியாதையும், மதிப்பும், ஆர்வமும், ஏன் முக்கியத்துவமும் போய் விடும். எனவே, பொறுப்புள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

29-08-2022


[1] வேதபிரகாஷ், தென்னிந்தியவரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!, பிப்ரவரி 2, 2020.