சங்கரதேவர் [1449-1568], வல்லபர் [1479-1532] மற்றும் சைத்தன்யர் [1386-1533] பக்திற்கு ஆற்றிய தொண்டு
15-16ம் நூற்றாண்டுகளில் துலுக்கர்களின் ஆதிக்கமும், சங்கர தேவர், வல்லபர் மற்றும் சைத்தன்யர் வாழ்ந்த நிலையும்: 15-16ம் நூற்றாண்டுகளில் கிழக்குப் பகுதிகளில் அசாம் முதல் கன்னியாகுமரி வரை வந்து சென்று பக்தியை வளர்த்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் சரிவர கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது[1]. இதே காலகட்டத்தில், அல்லாவுத்தீன் ஆலம் ஷா (1443-1451 CE), பஹ்லோல் லோடி (1451-1488), சிகந்தர் லோடி (1488-1517), இப்ராஹிம் லோடி (1517-1526), பாபர் (1526-1530), ஹுமாயூன் (1530-1556), ஷெர்ஷா சூரி மற்றும் அவனது வழி வந்தவர் (1540-1556) வடவிந்தியாவையும் பாஹ்மினி சுல்தான்களான மொஹம்மது ஷா II (1463-1482), மஹ்மூத் (1482-1518), மற்றவர் (1518-1526), தென்னிந்தியாவையும் ஆண்டு வந்தனர். வங்காளத்திலும் துலுக்கர்களின் பிரதிநிதிகள் அதிகாரம் செல்லுத்தி வந்தனர். மாலிக்காப்பூர் (1305-1311) ஏற்கெனவே ராமேஸ்வரம் வரை வந்து கொள்ளையடித்துச் சென்றான். இந்நிலையில் தான் அதே காலத்தில் வாழ்ந்து தொண்டாற்றிய மூன்று தத்துவ ஞானிகளின் தொண்டை எடுத்துக் காட்ட வேண்டிய கடமை ஆகிறது.
கிராம மற்றும் நகர்ப்புற பகுதி மக்கள் துலுக்கர் தாக்குதலால் அதிகமாக பாதிக்கப் பட்டது: துலுக்கர்களின் முக்கியக் கொள்கை கொள்ளையடிப்பு,கோவில் இடிப்பு மற்றும் மதமாற்றம். திடீறென்று 100-200 என்று குதிரைகளில் வந்து அத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வந்தனர். இதனால், கிராம மற்றும் நகர்ப்புற பகுதி மக்கள், ஒரு புதிய மதநம்பிக்கையாளர்களால் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். அந்நிலையில் தான் வித்யாபதி (1400-1477), நர்ஸி மெஹ்தா (1414-1481), சண்டிதாஸ் (1417-1477), குரு நானக் (1469-1538), சூர்தாஸ் (1479-1584), துளஸிதாஸ் (1511-1637), கபீர்தாஸ் (1398-1527), என்று பலர் பக்தியை வளர்க்க பாடுபட்டனர். இந்த பக்தி முறைகளில் அஹிம்சை பிரதானமாக போதிக்கப் பட்டது. இதனால், பக்தி இயக்கமானது, துலுக்கர்களின் குரூர கொலை-கொள்ளைகளுக்கு பதிலாக, அஹிம்சை முறையாக வளர ஆரம்பித்தது[2]. பொதுவாகப் பார்க்கும் போது, அத்வைத தத்துவத்தை போதிக்கும் மாதிரி காணப்பட்டாலும், துவைதம் தான் போதிக்கப் பட்டது. இதனை பலரும் கவனிக்கவில்லை எனலாம்[3].
சங்கரதேவர் [1449-1568]: இளமையிலேயே சாஸ்திரங்களை படித்தறிந்ததோடல்லாமல், உடற்பயிற்சி, மல்யூத்தம் போன்றவற்றுடன், உடம்பை ஆரோக்கியமாக வைத்திருந்தார். சங்கர தேவர், எளிமையான பக்தி முறையை பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தி, பக்திநெறியை வளர்த்தார். பூடான் நாட்டவர், பிராமணர், அஹோம்கள், மிஷிங், கர்பி, ரபா, கைவர்தர், துலுக்கர், சக்தி வழிபாடு செய்வோர் என்று பலர், இவரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். நாம்கர் அல்லது போர்கர் என்ற சிறிய குடிசை கோவில் அமைத்து,மக்களை பக்தியில் அரவணைத்தார். பாரதத்தில் பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று வந்தார். ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், திருவனந்தபுரம் வரை வந்து சென்றார். 119/ 120 வயது வரை வாழ்ந்து பணியாற்றியவர்.
வல்லபர் [1479-1532][4] : சம்பாரண்ய என்ற இடத்தில் லக்ஷ்மண பட்டர் –யல்லம்மா தம்பதியருக்குப் பிறந்தார். திருமணம் செய்து கொண்டு கிரஹஸ்தராகவே இருந்து, பணி புரிந்தவர். இவர் ராமானுஜரின் வைஷ்ணவத்தால் ஈர்க்கப் பட்டவர். பாரதம் முழுவதும் 20 வருடங்களுக்குச் சுற்றி வந்தவர். சைத்தன்யருடன், இரு முறை வாதிட்டிருக்கிறார். பகவத் கீதை ஆதாரமாக, “சுத்த அத்வைதம்” என்ற தத்துவத்தை போதித்தார். அனு பாஸ்ய சுபோதினி, விதவமாமந்திர், பக்திஹம்ஸ, பக்தி நிர்ணய என்று பல நூல்களை இயற்றியுள்ளார். இறுதியில் வாரணாசியில் தங்கி விட்டார். 1532ல் கங்கையில் குதித்து, ஜலசமாதி ஆனார். இவரது தாக்கம் குஜராத்தில் அதிகமாக உள்ளது.
சைத்தன்யர் (கி.பி. 1486-1533): வங்காள ஞானியர்களுள் இவர் மிக்கப் புகழ் பெற்றவர்., இவரது இயற்பெயர் கௌரங்கன் என்றாலும், ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம் என்றார். சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். வங்காளம், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், வேறு பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள பல்வேறு கவிஞர்களை தம்முடைய வாழ்க்கையாலும். போதனையாலும் மிகச் சிறந்த பக்திப் பாடல்களை எழுதுவதில் ஊக்குவித்தவர். ராதா-கிருஷ்ண பாவத்தில், மனைவி தன் கணவனைச் சரணம் அடைவதைப் போலவே இறைவனிடம் முழு நிறைவான சரணம் அடைதல் வேண்டும் என்பது இவரது “நாயகி-நாயக” பக்தி முறையாகும். இந்தியா முழுவதிலும் சைத்தன்ய வழிபாட்டு முறையைத் தழுவியவர்கள் பல கோடி மக்களாவர்,.
மூவரும் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதியது: பிரம்மசூத்திரம் வேதாந்த சூத்திரம் என்றழைக்கப்படுகின்ற 555 சூத்திர வரிகள் கொண்ட நூலை பாதராயணர் இயற்றினார். ஆராய்ச்சியாளர்கள் பாதராயண குருமரபில் வந்தவர்கள் தொகுத்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இருப்பினும், மிகத்தொன்மையான நூல் மற்றும் இதற்கு உரை எழுத எல்லா முக்கிய ஆன்மீக தலைவர்களும் முயன்றிருக்கின்றனர். இந்நூலுக்கு வேதாந்தத்தில் பிற்காலத்தில் எழுந்த கிளைகளை உருவாக்கிய சங்கரர், ராமானுஜர், மத்வர், வல்லபர், நிம்பார்க்கர் அனைத்து தத்துவமேதைகளும் உரைகள் எழுதியிருக்கிறார்கள். இவர்களது தாக்கம் வடகிழக்கு, கிழக்குக் கடற்கரை பிரதேசகளில் அதிகமாக இருப்பதை கவனிக்கலாம் அதாவது, இப்பகுதிகளில், துலுக்கர்களின் கொடுமைகளை தணிக்கவே, இவர்கள் தொண்டாற்றினர் எனத் தெரிகிறது. சோழர்களின் ஆளுமை மறைந்தவுடன், இவர்களது பணி ஆரம்பிந்துள்ளதை கவனிக்கலாம்.
அக்காலத்தில் பிரம்மசூத்திரத்திற்கு பாஷ்யம்,விரிவுரை-விளக்கவுரை எழுதுவது பண்டிதர்களின், ஞானியர்களின், மடாதிபதிகளின் சிறப்பம்சமாகக் கருதப் பட்டது. அதற்காக, அவர்கள் மூலச்சுவடிக்காக தேடி செல்வது பழக்கமாக இருந்தது.
ராதா–கிருஷ்ண பக்தியின் மகிமை: வைஷ்ணவம் திடீரென்று வளர்ந்த நிலையில், கிருஷ்ணருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் ராதாவழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது. ராதா (राधा), ராதிகா, ராதாராணி, ராதிகாராணி, ராதாசக்தி என்றெல்லாம் வழங்கப்படும் பெண்கடவுள், ஜெயதேவர் (12ம் நூற்றாண்டு CE), நிம்பர்க்க (13ம் நூற்றாண்டு CE), வல்லபர் (1479-1531 CE), கௌடிய, சைதன்ய (1486–1534 CE) சம்பிரதாயங்களில் ஒரு பெரிய முழுமுதல் பெண் கடவுளாக, மாபெரும் சக்திரூபமாக பாவிக்கப்பட்டது. ராதா மிகமுக்கிய, பெரிய, மஹாசக்தியாக ஸ்கந்தபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. கோபி, கோபிகா, கோபிகை என்றால் இடையர்குலப்பெண் என்று பொருள். பக்தி இலக்கியத்தின்படி, ராதா என்ற கோபிகை கிருஷ்ணரிடம் மிக அதிகமான பக்தியை வைத்திருந்தாள். அந்நிலையில் தான் ராதா கிருஷ்ண (राधा कृष्ण) என்ற நம்பிக்கை, வழிபாடு, தத்துவம் தோன்றியது. கிருஷ்ணருடன் இருநிலைகளில் மனைவியாக (ஸ்வக்ய ரஸா) மற்றும் காதலியாக (பரக்கிய ரஸா) சித்திரிக்கப்பட்டது. இத்தகைய மாறுபாடு விசித்திரமாக இருக்கிறது, ஏனெனில், ராதை, கிருஷ்ணனைவிட வயதில் பெரியவள் மற்றும் பக்தி வெறெந்த உணர்வுடன் ஒப்பிட முடியாது என்றுள்ளது. அந்நிலையில் இத்தகைய “நாயக-நாயகி” பாவத்தில் பக்தி மூலம் பெண்மையை தெய்வமாக, சக்தியாக இடைக்காலத்தில் மாற்ற வேண்டிய தேவை என்ன என்று ஆராயவேண்டியுள்ளது. உண்மையில் முகமதியர்களால் சீரழிந்த பெண்கள் மறுபடியும் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில், அவர்கள் ஹேரத்திற்கு செல்வதற்கு பதிலாக கோபிகைகளாக பிருந்தாவனத்தில் இருக்க பெண்கள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.
© வேதபிரகாஷ்
10—03-2020
[1] K. V. Ramakrishna Rao, A Comparative and Critical Study of Shankaradeva, Vallaba and Caitanya, in “Bramaputra Beckons” – International Conference on Brahmaputra Civilization, Guhwahati, October 20th to 22nd 2000, pp. 28-42.
[2]K. V. Ramakrishna Rao, A Comparative and Critical Study of Shankaradeva, Vallaba and Caitanya,https://www.hinduwebsite.com/history/research/sankaradeva.asp?fbclid=IwAR3spiYPWWtH3euUgvMwv_mQSqMzfHX6nYJ1tinAVswHJb9IeSmFAwVPrao
[3] Though scholars interpret that the saints followed advaita philosophy, it appears that they actually followed dvaita philosophy, though differed in some aspects according to the exigencies. Their concepts of Brahman, Jiva, Jagat, Mukti, Vidhya, Bhakti and other factors had deviated considerably from the advaitic ideas.
[4] K. V. Ramakrishna Rao, A Comparative and Critical Study of Shankaradeva, Vallaba and Caitanya, in “Bramaputra Beckons” – International Conference on Brahmaputra Civilization, Guhwahati, October 20th to 22nd 2000, pp. 28-42. முழு ஆய்வுக்கட்டுரையை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம் – https://archive.org/details/AComparitiveAndCriticalStudyOfShankaradevaVallabhaAndChaitanya/page/n11/mode/2up