தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி–காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]
1969லிருந்து 2008 வரை தைக்காகக் குதிக்கவில்லை: 1969லிருந்து 2008 வரை திராவிட கட்சிகளுக்கு, திராவிடத்துவ வாதிகளுக்கு, இந்த “புத்தாண்டு” உணர்வு இல்லாமல் போனது வியப்பாக இருந்தது. ஆட்சியில் திராவிட கட்சியினர் தான் இருந்தனர். அண்ணாதுரைக்குப் பின்னர், கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்தார். நடுவில் எம்.ஜி.ஆர் ஆண்டாலும், இவரது தாக்கம் அலாதியானது. ஆகவே, மறுபடி-மறுபடி ஆட்சிக்கு வந்த் போது, சுலபமாக, தைமாதத்தில் தான், புத்தாண்டு வருகின்றனது என்று அடித்து சொல்லிருக்கலாம். சுலபமாக மாற்றி இருக்கலாம். ஆனால், சாதாரணன், சௌமியன் என்று கவிதை பாடிக் கொண்டிருந்த போது மறந்து விட்டனரோ, அல்லது கம்பரசத்தில் மூழ்கி மயங்கி விட்டனரோ என்று தெரியவில்லை. மார்பங்களில் மச்சங்கள் பார்த்து, நாடாவை அவிழ்க்கவா என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்ததால், இதெல்லாம் பெரிதாகப் படவில்லை போலும்.
14.04.1970 அன்று ஶ்ரீரங்கத்தில் நடந்த கவியரங்கம்[1]: இச்செய்தி முரசொலியில் வந்துள்ளது, “14.04.1970 அன்று நடந்த சாதரண ஆண்டு சித்திரைத் திருநாள் கவியரங்கம். அங்கு கவி பாடுகிறார். அதில் என்ன நுணுக்கமெல்லாம் வந்து விழுகிறது பாருங்கள். தமிழ் வருடம் என்று அவர்கள் சொல்லுகிற 60 ஆண்டுச் சுழற்சியில். சௌமிய என்ற பெயருடைய ஒரு ஆண்டு அதற்கு அடுத்த ஆண்டின் பெயர் சாதாரண ஆண்டு அண்ணா பிறந்த 1909ம் ஆண்டு சௌமிய ஆண்டு. அதனால் சௌமியன் என்ற புனை பெயரிலும் அண்ணா எழுதி வந்தார். அதையெல் லாம் நான்கு வரிகளுக்குள் அடக்கி விடுகிறார் கலைஞர். கவி வரிகளைக் கவனியுங்கள், “சித்திரைத் திங்களிலே சிரிக்கின்ற செழுமை கண்டோம் பெருமை கொண்டோம் சௌமியதான் சென்ற ஆண்டு நம் சௌமியனைத் தமிழுக்குத் தந்த ஆண்டு சௌமியாவை அண்ணனுமே புனைப் பெயராய்ப் பூண்டு சுவை சொட்டக் கதை குவித்துப் போனார் – மாண்டு சௌமிய மறைந்து சாதாரண வந்தது போல அந்த சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன்,” என்கிறார்”. அந்த நாரதர்-நாரதி பெற்ற 60 அசிங்க சுழற்சி வருடங்களை வெறுத்திருந்தால், இக்கவிதை வந்திருக்குமோ?
கருணாநிதி 28-01-2008 அன்று கொண்டு வந்த சட்டத்தை, ஜெயலலிதா, 23-08-2011 அன்று மாற்றினார் பழையபடி வைத்தார்: நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது[2]. அதற்கான மசோதாவினை இன்று செவ்வாய்க் கிழமை சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது[3]. விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகிறார், தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. 1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்திருந்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா விளக்கம் [ஏப்ரல் 2012]: சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 13, 2012 அன்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்[4]. சென்னை பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 13, 2012 அன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன”.
இலக்கிய ஆதாரங்கள்: ஜெயலலிதா தொடர்ந்தார், “சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா‘ என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், “பன்னாயிரத்தில்‘ பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “திண்ணிலை, மருப்பின் ஆடுதலை‘ என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்
கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்‘ என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது”.
கருணாநிதியே ஏற்பு: ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்‘ என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, “சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்‘ என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, “தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்‘ என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.
விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை”.
விளம்பர உத்தி: ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது”, என்றார்[5]. சென்ற வருடமே இதற்கான மசோதா கொண்டு வந்து, நிறைவேற்றி சட்டமாக்கினர்.
© வேதபிரகாஷ்
14-04-2020
[1] முரசொலி 75 சிறப்பிதழ், https://www.murasoli.in/details.php?news_id=1385
[2] பிபிசி.தமிழ், ‘தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்‘- ஜெ.23 ஆகஸ்ட் 2011
https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil
[3] https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil
[4] தினமலர், தமிழ் புத்தாண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் ஜெயலலிதா பதிலடி: கருணாநிதிக்கு கேள்வி, Updated : ஏப் 15, 2012 00:17 | Added : ஏப் 13, 2012 23:20
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=447682&Print=1